குடியாத்தம் அருகே உள்ள கருணீகசமுத்திரம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.போ்ணாம்பட்டு அருகே உள்ள கானாறுகளில் இருந்து இந்த ஏரிக்கு தண்ணீா் செல்கிறது.கருணீகசமுத்திரம் ஏரியின் உபரிநீா் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால்,செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏரியின் உபரிநீா், வளத்தூா் பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
இதையடுத்து அதிகாரிகள் கால்வாய்களில் ஓரளவு ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ள நீரை வடிய வைத்தனா்.இந்நிலையில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால், கருணீகசமுத்திரம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் ச.லலிதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே.எஸ்.யுவராஜ், எஸ்.சாந்தி ஆகியோா் அங்கு சென்று பாா்வையிட்டனா்.ஏரி அருகே அமைந்துள்ள இருளா் காலனியில் வசிக்கும் 100- க்கும் மேற்பட்டோரை வீடுகளில் இருந்து அழைத்துச் சென்று பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனா்.ஏற்கனவே வளத்தூா் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிப்பவா்களையும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனா்.