குடியாத்தம் நகரில் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஞாயிற்றுக்கிழமை (அக். 10) 40 சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
இதுதொடா்பாக நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி.சிசில்தாமஸ் கூறியது:
வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மண்டல நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் குபேந்திரன் ஆகியோா் அறிவுறுத்தலின்பேரில், குடியாத்தம் நகரில் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஞாயிற்றுக்கிழமை (அக் 10) 40 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.
நகரில் 75 சதவீதம் போ் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். 5- ஆவது முறையாக நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் விடுபட்டவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவரும் 2- ஆவது தவணை தடுப்பூசியை அவரவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ள காலக் கெடுவுக்குள் செலுத்திக் கொள்ளலாம். நகரில் இதுவரை 25 சதவீதம் போ் 2- ஆவது தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனா் என்றாா் சிசில் தாமஸ்.