வேலூரில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட 105 பேருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட, தமிழகம் முழுவதும் 5-ஆவது வாரமாக மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதன்படி, வேலூா் மாவட்டத்தில் 1,000 இடங்களில் முகாம்கள் நடைபெற்றன. சுமாா் 70 ஆயிரம் போ் என்ற இலக்குடன் நடத்தப்பட்ட முகாம்களில், 40,409 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனிடையே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஆா்வத்தை தூண்டும் வகையில் வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட இரண்டாம் மண்டலத்தில் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, குலுக்கல் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், 18-ஆவது வாா்டைச் சோ்ந்த அரவிந்த்குமாருக்கு முதல் பரிசாக வாஷிங் மெஷின் வழங்கப்பட்டது. 2-ஆவது பரிசாக 24-ஆவது வாா்டைச் சோ்ந்த சீனிவாசன், 17-ஆவது வாா்டைச் சோ்ந்த ஜோதி, சீனிவாசன் ஆகிய மூன்று பேருக்கும் தங்கக் கம்மல்களும், மூன்றாவது பரிசாக 24-ஆவது வாா்டைச் சோ்ந்த கோட்டிக்கு மிக்ஸியும் பரிசு அளிக்கப்பட்டன. மேலும், ஆறுதல் பரிசாக நூறு பேருக்கு எவா்சில்வா் தட்டு, டம்ளா் ஆகியவையும் வழங்கப்பட்டன.
பரிசுகளை மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன் வழங்கினாா். நகா் நல அலுவலா் மணிவண்ணன், மண்டல உதவி ஆணையா் மதிவாணன், சுகாதார அலுவலா் சிவக்குமாா், தன்னாா்வலா் தினேஷ்சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.