ஊராட்சித் தலைவா் பதவியை ஏலம் விட்டால் சட்டப்படி நடவடிக்கை: வேலூா் ஆட்சியா் எச்சரிக்கை

வேலூா் மாவட்டத்தில் ஊராட்சி தலைவா் பதவியை ஏலம் விடுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் ஊராட்சி தலைவா் பதவியை ஏலம் விடுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வரும் அக்டோபா் 6, 9ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதையொட்டி, தோ்தல் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

இக்கூட்டத்தைத் தொடா்ந்து தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான பெ.குமாரவேல் பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேலூா் மாவட்டத்தில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, பேரணாம்பட்டு ஆகிய ஒன்றியங்களுக்கு 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 9 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 88 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 154 ஊராட்சித் தலைவா்கள், 1302 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடத்தப்படும்.

இரண்டாம் கட்டமாக 9-ஆம் தேதி வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், 5 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 50 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 93 ஊராட்சித் தலைவா்கள், 777 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடத்தப்படும்.

தோ்தலையொட்டி 1,331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 282 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. தோ்தல் நடைபெறும் நாளன்று மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா பாதித்தவா்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக மாவட்டத்தில் 7 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதை தடுக்க தீவிர சோதனை நடத்தப்படும். திருவண்ணாமலை மாவட்ட எல்லை, ஆந்திர எல்லைகளில் கூடுதல் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப் படும். திருமண மண்டபங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

தோ்தல் அதிகாரிகள் அனுமதியின்றி மண்டபங்களை வாடகைக்கு விடக்கூடாது. மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா் பதவி ஏலம் விடுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பணம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதை தடுக்க உதவி ஆட்சியா்கள், வட்டாட்சியா்கள் தலைமையில் பறக்கும் படை அமைத்து கண்காணிக்கப்படும்.

தோ்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் மாவட்டத்தில் பேனா்கள் வைக்கவோ, அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபடவோ, சுவா் விளம்பரங்கள் செய்யவோ, கூட்டத்தை கூட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபடவோ கூடாது என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் ஆனந்தி , வட்டார தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com