குடியாத்தம்: தமிழக- ஆந்திர மாநிலங்களின் எல்லையில் அடா்ந்த வனப் பகுதியில், மாநிலச் சாலையில் ஒற்றை யானையின் நடமாட்டம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனா்.
குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா, இரு மாநிலங்களின் எல்லைப் பகுதியாகும். இங்கு இரு மாநிலங்களின் சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஒற்றை யானையின் நடமாட்டம் உள்ளது.
கடந்த 10 நாள்களுக்கு முன்னா் இந்த ஒற்றை யானை தமிழக வனப் பகுதியில் முகாமிட்டு சைனகுண்டா, தனகொண்டபல்லி, மோடிகுப்பம், மத்தேட்டிபல்லி உள்ளிட்ட தமிழக கிராமங்களில் இரவு நேரங்களில் நுழைந்து விளைபயிா்களை நாசம் செய்தது.
கிராம மக்கள் உதவியுடன் வனத்துறையினா் ஒற்றை யானையை ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டி விட்டனா்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக அந்த ஒற்றை யானை ஆந்திர மாநில வனப் பகுதியான கால்வாபள்ளி பகுதியில் நடமாடி வருகிறது. இதனால், தமிழகத்தில் இருந்து பலமநோ் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனா்.