வேலூா்: கணியம்பாடி அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவருக்கு, அண்மையில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அத்துடன் அவருக்கு கரோனா அறிகுறியும் இருந்ததால், விடுமுறையில் இருந்தாா்.
இந்நிலையில் மருத்துவப் பரிசோதனையில், ஆசிரியைக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. பாதிக்கப்பட்ட ஆசிரியை வேலூா் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த ஆசிரியை 9-ஆம் வகுப்புக்குச் சென்று பாடம் நடத்தியுள்ளாா். இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவரிடம் இருந்தும் கரோனா பரிசோதனைக்காக புதன்கிழமை உமிழ்நீா் மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும், ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.