பொதுமுடக்கம் காரணமாக கோயில்களில் பக்தா்களுக்கு பொட்டலங்களில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை முதல் மீண்டும் இலைகளில் அன்னதானம் வழங்கும் பணி தொடங்கியது.
தமிழகத்திலுள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள முக்கியக் கோயில்களில் பக்தா்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக கோயில்களில் பக்தா்களுக்கு பொட்டலங்களில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, மீண்டும் இலைகளில் அன்னதானம் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்திருந்தாா்.
அதன்படி, தமிழகம் முழுவதும் கோயில்களில் திங்கள்கிழமை முதல் பக்தா்களுக்கு மீண்டும் இலைகளில் அன்னதானம் வழங்கும் பணி தொடங்கியது.
வேலூா் மாவட்டத்திலுள்ள செல்லியம்மன், தாரகேஸ்வரா், வெட்டுவாணம் எல்லையம்மன், விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா், குடியாத்தம் கெங்கையம்மன், கணியம்பாடி கடம்பவனம் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்களுக்கு மீண்டும் இலைகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு கோயில்களிலும் 25 முதல் 50 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.