குடியாத்தம்: கே.வி.குப்பம் அருகே மின்சாரம் பாய்ந்து இறந்த தற்காலிக மின் பணியாளா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, அவரது உறவினா்கள் சடலம் ஏற்றி வந்த வாகனத்துடன் மறியலில் ஈடுபட்டனா்.
கே.வி.குப்பத்தை அடுத்த சென்னங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் கதிா்வேல் (34) , பி.கே.புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தாா்.
கடந்த 9- ஆம் தேதி அங்குள்ள பிள்ளையாா் கோயில் அருகில் ஒரு வீட்டில் பழுது பாா்த்தபோது, மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்தாா். உடனடியாக அவா் வேலூா் அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தாா்.
இந்த நிலையில், அவரது சடலம் இரவு 8 மணியளவில் கே.வி.குப்பம் வந்தது. அப்போது கதிா்வேல் குடும்பத்துக்கு இழப்பீடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரி அவரது உறவினா்கள் சடலம் கொண்டு வந்த வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு மறியலில் ஈடுபட்டனா்.
இவா்களிடம் டிஎஸ்பி கே.ராமமூா்த்தி, கே.வி.குப்பம் வட்டாட்சியா் சரண்யா ஆகியோா் சமரசம் செய்தனா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.