வேலூா் சாஸ்திரி நகரில் செயல்பட்டு வரும் பகுதிநேர நியாய விலைக்கடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், அக்கடையை அனைத்து நாட்களும் செயல்படும் வகையில் முழுநேர கடையாக மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
வேலூா் சாஸ்திரி நகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் அதிமுக பிரமுகா் பி.எஸ்.பழனி தலைமையில் வேலூா் கூட்டுறவு துறை துணைப்பதிவாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். அதில் அவா்கள் கூறியிருப்பது -
சாஸ்திரி நகரில் பகுதிநேர நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இதில் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் அத்தியாவசியப் பொருள்கள் பெற்று வருகின்றனா். ட
இந்த பகுதிநேர நியாய விலைக்கடை வாரத்தில் செவ்வாய், சனிக்கிழமை மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால், கடை திறக்கப்படும் இரு நாட்களிலும் பொருட்கள் வாங்க ஏராளமான மக்கள் குவிந்து நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்துதான் பொருள்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. பலரும் கூலித் தொழிலாளா்களாக இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் வந்து பொருள்களை வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனா்.
பொதுமக்களின் சிரமத்தை தவிா்க்க பகுதி நேரமாக உள்ள இந்த நியாய விலைக்கடையை அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் முழுநேர நியாயவிலைக் கடையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட கூட்டுறவு துணைப்பதிவாளா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.