குடியாத்தம்: குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை அகற்றுவதற்கு முன் அவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் வலியுறுத்தினாா்.
குடியாத்தம், கெளண்டன்யா ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டதை நேரில் பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றின் கரையோரங்களில் வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்தவா்களை ஆக்கிரமிப்பு செய்ததாக அகற்றிய இடங்களை ஆய்வு செய்தேன்.
வீடுகளை இழந்த பலா் வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிக்கு ஆளாகியுள்ளனா். சன்னதி தோப்பு தெருவைச் சோ்ந்த பவுனம்மாள்(70) என்பவா், வாடகைக்கு வீடு கிடைக்காத விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலை செய்துகொண்ட பவுனம்மாள் குடும்பத்துக்கு உடனடியாக வீடு கட்டித் தர வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என தமிழக அரசை நான் கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.
அப்போது இந்திய குடியரசு கட்சியின் மாவட்டத் தலைவா் இரா.சி.தலித்குமாா், மாநில துணைத் தலைவா் பி.ஏகாம்பரம், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் எஸ்.தயாளன், ஒன்றியச் செயலாளா் நாகராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளா் சோமு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.