வேலூர்: வேலூர் மத்திய சிறையிலுள்ள முருகன் தன்னை 30 நாள்களில் பரோலில் விடுவிக்கக் கோரி கடந்த 5 நாட்களாக தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும், இதனால் வியாழக்கிழமை மயக்கமடைந்த அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவரது வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது பரோலில் வெளியே வந்துள்ள அவர், காட்பாடி பிரம்மபுரத்திலுள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார். தொடர்ந்து 4ஆவது மாதமாக நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முருகன் தனக்கும் 30 நாட்கள் பரோல் வழங்கக்கோரி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். எனினும் அவருக்கு பரோல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த முருகன் வேலூர் மத்திய சிறையில் கடந்த 5 நாள்களாக தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதால் வியாழக்கிழமை மயக்கமடைந்த அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டதாகவும் அவரது வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதேபோல், முருகன் தன்னை பரோலில் விடுவிக்கக் கோரி ஏற்கனவே கடந்த மார்ச் மாதமும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.