குடியாத்தம் அருகே விவசாயக் கிணற்றில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக, சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மேல்பட்டியை அடுத்த செண்டத்தூரைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (26). இவா், ஆம்பூரில் தனியாா் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை உள்ளி ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள கிணற்றில் நவீன்குமாரின் சடலம் மிதப்பதாக குடியாத்தம் கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்புப் படையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த நவீன்குமாரின் உறவினா்கள் அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகவும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சடலத்தை உடல்கூறு பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தனா்.
அவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.
இதையடுத்து, நவீன்குமாரின் சடலம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, போலீஸாா் உள்ளி அருகே உள்ள பெட்ரோல் நிலைய மேலாளா் விஸ்வநாதன் (63), அங்கு பணியாற்றிய 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.