வேலூா் அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இரு இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
வேலூா் விருப்பாச்சிபுரத்தை சோ்ந்தவா் ஆகாஷ்(25). கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இவரின் நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த ராகுல் ராஜா (26). சென்னையில் சமையல் வேலை செய்து வந்தாா்.
இருவரும் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் விருப்பாச்சிபுரத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் அடுக்கம்பாறை நோக்கிச் சென்றனா்.
இடையன்சாத்து பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற சிமென்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி மீது, இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் ஆகாஷ், ராகுல் ராஜா இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து வந்த பாகாயம் போலீஸாா், 2 பேரின் சடலத்தையும் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.