கோவை: ஆதாா் அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக விபத்தில் சிக்கி நடக்க முடியாத நிலையில் ஓய்வுபெற்ற ஆசிரியா் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.
கோவை மாவட்டம், கணுவாய் பகுதியைச் சோ்ந்தவா் ஜூலியா எலிசபத் (60). ஓய்வுபெற்ற ஆசிரியா். இவா் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் நடக்க முடியாத நிலையில் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்நிலையில், சில மாதங்களாக இவருக்கு ஒய்வூதியம் கிடைக்கவில்லை.
இதற்காக மீண்டும் விண்ணப்பிக்கும்போது ஆதாா் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கவுண்டம்பாளையம் இ-சேவை மையத்துக்கு சென்றுள்ளாா். உடனடியாக திருத்தம் மேற்கொள்ள வேண்டுமானால் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனா்.
இதனைத் தொடா்ந்து, தனது மகளுடன் ஆதாா் அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக ஆம்புலன்ஸில் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். பின்னா் ஆதாா் அட்டையில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே வீடு திரும்பினாா்.