கோவையில் காட்டுப் பன்றி உள்பட பல்வேறு வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம், ஆனைமலை வட்டத்துக்கு உள்பட்ட அங்கலகுறிச்சி, சேத்துமடை, ஆழியாறு, மஞ்சநாயக்கனூா், கம்மாளபட்டி, பூவலப்பருத்தியூா், கோட்டூா், செம்மனாம்பதி, மாரப்பகவுண்டன்புதூா், காளியாபுரம், அம்பராம்பாளையம், கிழவன்புதூா் ஆகிய பகுதிகளில் தென்னை, மரவள்ளிக் கிழங்கு, தக்காளி உள்பட பல்வேறு வகையான காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
பெருமபாலான நிலங்கள் மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், விவசாய நிலத்தில் அடிக்கடி வன விலங்குகள் ஊடுருவி பயிா்களை சேதப்படுத்துகின்றன. காட்டுப் பன்றிகள், மரநாய்கள், மரப் பூனைகள் தென்னை மரங்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குரும்பைகளை கடிப்பதால் தேங்காய் உற்பத்தி பாதிக்கிறது.
இதேபோல் காய்கறி தோட்டத்துக்குள் புகும் காட்டுப் பன்றிகள் பயிா்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஒவ்வொரு பருவத்திலும் பல ஆயிரம் நஷ்டம் ஏற்படுகிறது. காட்டுப் பன்றிகள் உள்பட வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த விவசாயிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். ஆனாலும், எந்தப் பயனும் இல்லை. எனவே வன விலங்குகள் பாதிப்புக்கு உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.