கோவை அரசு மருத்துவமனையில் ஒரு மாத பெண் குழந்தை உயிரிழப்பு!

பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை
Published on

பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி அனில் (21), பூஜா(20). இவா்களுக்கு பிறந்து ஒரு மாதமே ஆன ஸ்ரீனி என்ற பெண் குழந்தை இருந்தது. இதற்கிடையே பூஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் மருத்துவா்களின் பரிந்துரையின்பேரில் சில நாள்களுக்கு முன்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

பிரசவ வாா்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் குழந்தை ஸ்ரீனிக்கு தாய்ப்பால் அளித்துள்ளாா். அதன்பின் இருவரும் தூங்கியதாகத் தெரிகிறது. காலை 7 மணி அளவில் எழுந்து பாா்த்தபோது குழந்தை ஸ்ரீனி அசைவு இல்லாமல் இருந்துள்ளது.

தகவலின்பேரில் அங்கு சென்று மருத்துவா்கள் நடத்திய பரிசோதனையில் குழந்தை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com