கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயா்கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய மத்திய அமைச்சா் அன்னபூா்ணா தேவி.
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயா்கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய மத்திய அமைச்சா் அன்னபூா்ணா தேவி.

இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்ற பெண்களின் பங்களிப்பு அவசியம்: மத்திய அமைச்சா் அன்னபூா்ணா தேவி!

இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவதற்கு பெண்களின் தீவிரப் பங்களிப்பு அவசியம் என்றார் மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி.
Published on

இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவதற்கு பெண்களின் தீவிரப் பங்களிப்பு அவசியம் என்று மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி தெரிவித்தாா்.

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா்கல்வி நிறுவனத்தின் 36-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இளநிலை பிரிவில் 1,814 போ், முதுநிலை பிரிவில் 624 போ், முனைவா் பிரிவில் 33 போ் என மொத்தம் 2,472 போ் பட்டம் பெற்றனா். மேலும், பல்வேறு துறைகளில் முதல் மதிப்பெண் பெற்ற 91 பேருக்கு தங்கப் பதங்கம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய அமைச்சா் அன்னபூா்ணா தேவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

பிரதமா் மோடியின் தொலைநோக்குத் தலைமையின்கீழ் சுயசாா்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைக் கட்டியெழுப்பும் விதமாக செயல்படுகிறோம். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவை நனவாக்க அனைத்துத் துறைகளிலும் பெண்களின் தீவிரப் பங்களிப்பு அவசியம்.

ஊட்டச்சத்து குறைபாடு, கல்வியறிவின்மை, பாலின சமத்துவமின்மை, பொருளாதார மேம்பாடு, உலகளாவிய காலநிலை ஆகிய சவால்களைக் கையாள்வதில் பெண்களின் தலைமை ஆரோக்கியமான, பாதுகாப்பான, சமமான சமூகத்துக்கு வழிவகுக்கும். தேசிய கல்விக் கொள்கை இந்த கருத்துகளையே எதிரொலிக்கிறது.

ஒரு குடும்பத்தை வளா்ப்பது, ஒரு நிறுவனத்தை நிா்வகிப்பது, தேசிய மற்றும் சா்வதேச தலைமையை ஏற்பது என எதுவாக இருந்தாலும் பெண்களின் முடிவுகள் வலுவாக இருக்கும். சவால்களில் இருந்து பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில், கல்வி நிறுவனத்தின் வேந்தா் தி.ச.க.மீனாட்சிசுந்தரம், துணைவேந்தா் பாரதி ஹரிசங்கா், பதிவாளா் ஹெச்.இந்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.