இந்திய கல்வி முறையில் புதுமைகள் அவசியம்
By பொள்ளாச்சி, | Published on : 30th June 2014 03:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
இந்திய கல்வி முறையில் புதுமைகள் அவசியம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன் வலியுறுத்தினார்.
பொள்ளாச்சி புளியம்பட்டி பி.ஏ. கல்வியியல் கல்லூரியில் நான்காவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. பி.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். துணைத் தலைவர் லட்சுமி அப்புக்குட்டி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வின் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, துணைவேந்தர் விஸ்வநாதன் பேசியது:
ஆசிரியர்கள் வகுப்பறையில் மட்டுமின்றி எல்லா இடங்களிலும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவேண்டும். ஏனெனில், நம்மை சமூகம் உற்றுநோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது.
இன்றைய மாணவ சமுதாயத்தினர் ஆங்கிலம் பேசுவதையே பெருமையாக கருதுகின்றனர். பிற மொழியை கற்பதில் தவறொன்றும் இல்லை. அதே நேரத்தில் தாய்மொழியை சீர்தூக்கி பேச வேண்டும்.
இந்திய கல்வி முறையில் அனுபவத்தின் ஆண்டை கணக்கிட்டு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. ஆனால், சீனாவில் கல்வித் துறையில் ஒருவர் எத்தனை புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார் என்பதை கணக்கிட்டு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. வாழ்வாதார தரத்தில் சீனா 24-வது இடத்திலும், இந்தியா 57-வது இடத்திலும் உள்ளன. நம்முடைய கல்வி முறையில் புதுமை ஏற்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
பி.ஏ. கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரி பழனிச்சாமி நன்றி கூறினார்.