கேரள வாழ் தமிழ் தலித் மக்கள் பிரச்னை தொடர்பாக அவர்களிடம் அந்த மாநில எதிர்க் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா புதன்கிழமை குறைகளைக் கேட்டறிந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முதலமடை ஊராட்சிக்கு உள்பட்டது அம்பேத்கர் காலனி. இங்கு வசிக்கும் தமிழ்பேசும் தலித் மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அந்த மக்களிள் குறைகளை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் கேட்டு வந்தனர். இந்நிலையில், கேரள எதிர்க் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா அம்பேத்கர் காலனியில் புதன்கிழமை ஆய்வு செய்து அந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அம்பேத்கர் காலனி மக்கள் ஜாதி ரீதியாகப் புறக்கணிக்கப்படுவது தெரிகிறது. இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. வீடு சேதமடைந்த மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வீடுகள் சரிசெய்து தரப்படும். இந்தப் பிரச்னை குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளேன் என்றார்.
உடன், காங்கிரஸ் கட்சி செயலாளர் விஷ்ணுநாதன், பாலக்காடு எம்எல்ஏ சாபிபிரம்பில், பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் சுமேஷ்அச்சுதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.