கோவையில் 16 வயதுக்குள்பட்டவர்களுக்கான (ஜூனியர்) மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகம், கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் ஆடவர் பிரிவில் 30 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகளும், மகளிர் பிரிவில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகளும் பங்கேற்கின்றன. போட்டிகள் வரும் 18-ஆம் தேதி வரை பி.எஸ்.ஜி. கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகின்றன. முதல் நாளில் நடைபெற்ற ஆடவருக்கான போட்டிகளில் திருச்சி அணி 54-36 என்ற புள்ளிக் கணக்கில் கன்னியாகுமரி அணியைத் தோற்கடித்தது.
மற்றோர் ஆட்டத்தில் சென்னை மண்டல அணி 64-50 என்ற புள்ளிகள் கணக்கில் நாமக்கல் அணியையும், திண்டுக்கல் மாவட்ட அணி 53-10 என்ற புள்ளிகளில் ராமநாதபுரம் அணியையும் தோற்கடித்தன.
மகளிருக்கான பிரிவில், நாகப்பட்டினம் அணி 64-22 என்ற புள்ளிகளில் கரூர் அணியையும், மதுரை அணி 46-16 என்ற புள்ளிகள் கணக்கில் நீலகிரியையும், தூத்துக்குடி 70-48 என்ற புள்ளிகள் கணக்கில் விருதுநகரையும், சென்னை மண்டல அணி 53-14 என்ற புள்ளிகள் கணக்கில் திருப்பூர் மாவட்ட அணியையும் தோற்கடித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.