கழுத்து எலும்பு வளைந்து நடக்க முடியாமல் சிரமப்பட்ட இளைஞருக்கு கே.ஜி. மருத்துவமனையில் நவீன சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன், ஜெயா தம்பதியின் மகன் விக்னேஷ் (21). இவருக்கு சிறிய வயது முதலே கழுத்துப் பகுதியில் உள்ள எலும்பு வளைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும், உடலில் உள்ள நரம்புகளில் உருவான கட்டியால் எலும்புகள் மேலும் வளைந்து நாளடைவில் நரம்புகள் மீது அழுத்தம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால், கை, கால் செயலிழந்து நடக்க முடியாமல் விக்னேஷ் பாதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கே.ஜி.மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷை, மூடநீக்கவியல் அறுவை சிகிச்சை நிபுணர் சக்திவேல், முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசோதித்தனர்.
இதுகுறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் கூறியதாவது:
விக்னேஷுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து 6 செ.மீ. அளவிலான வளைந்த எலும்புகளை அகற்றினர். பின்னர், இடுப்புப் பகுதியில் இருந்து எலும்புகள் எடுக்கப்பட்டு கழுத்துப் பகுதியில் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின்போது, உடலில் உள்ள தசை நரம்புகள் நியூரோ மானிட்டருடன் இணைந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் வளைந்த கழுத்துப் பகுதி எலும்பு அகற்றப்பட்டு, மாற்று எலும்பு பொருத்தப்பட்டு 8 ஸ்குருவால் இணைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.