கோவையில் தொழிலதிபரைக் கடத்திப் பணம் பறிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, காவல் துறையினர் கூறியதாவது:
கோவை, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் இனாயத்துல்லா (56). தொழிலதிபரான இவர், கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இயக்கங்களின் கூட்டமைப்புத் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், மே 1-ஆம் தேதி இனாயத்துல்லாவை சிலர் காரில் கடத்தி ரூ. 25 லட்சம் பணம் பறிக்க முயற்சி செய்வதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நடத்தப்பட்ட விசாரணையில் ஜின்னா (25), நவுபுல் ரிஸ்வான் (30), ஷபிக் ரஹ்மான், சையது இப்ராகிம், பெரோஸ், அப்பாஸ் (என்கிற) பழனி அப்பாஸ், ரிகன் டேவிட்குமார், அப்துல்லா சேட் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடத்தலுக்கு சதித்திட்டம் தீட்டிய ஜின்னா, நவபுல் ரிஸ்வான் ஆகியோர் கடந்த வாரம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, அப்துல்லா சேட், அப்பாஸ், ரிகன் டேவிட்குமார் ஆகிய மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவிட்டார்.
இதைடுத்து, அவர்கள் மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.