கோவை மாநகரில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 4 இளைஞர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது:
கோவை ரத்தினபுரி, சாமி காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் சைமன் கிறிஸ்டோபர் (24), கெளதம் (24), ஜெய்சிங் (29), பாப்பநாயக்கன்பாளையம் ரொட்டி கடை வீதியைச் சேர்ந்தவர் கவாஸ்கான் (24). இவர்கள் நான்கு பேர்கள் மீதும் அடிதடி, கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்கள் தொடர்ந்து இதேபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், இவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ரத்தினபுரி போலீஸார் மாநகர காவல் ஆணையர் சுமித் சரணுக்கு பரிந்துரைத்தனர்.
இதையடுத்து அவர்கள் நான்கு பேர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கெனவே சிறையில் இருக்கும் அவர்களிடம் இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது.