சிபிஎஸ்இ தேர்வு விவகாரம்: தபெதிக உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சிபிஎஸ்இ தேர்வில் ஜாதி, மதம் குறித்து வினா கேட்கப்பட்டதால் மத்திய அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
மத்திய அரசின் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஜாதி, மத வேறுபாடுகளை மாணவர்கள் மத்தியில் கற்பிக்கின்ற விதமாக பாடத் திட்டங்கள் உள்ளன. சமீபத்தில் சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு தேர்வில் ஜாதிய வேறுபாட்டை உண்டாக்கும் வகையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. எனவே, ஜாதி பாகுபாட்டை வலியுறுத்தும் கேள்விகளை பாடத் திட்டத்திலிருந்து அகற்ற வேண்டும். இதுபோன்ற ஜாதி மத வேற்றுமைகளை கற்பிக்கும் சிபிஎஸ்இ பள்ளிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்ப் புலிகள் அமைப்பு, புரட்சிகர விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.