7 பேர் விடுதலை: சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஆளுநர்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலமாக கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், இந்தத் தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டாலும் அது தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், குற்றச்சாட்டு எழுந்தாலேயே சம்பந்தப்பட்டவர் பதவி விலக வேண்டும் என கூறுவது தவறு. திமுக போன்ற கட்சிகள் மத்திய அரசுடன் இணைந்திருந்தபோது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், அவர்கள் அப்போது பதவி விலகவில்லை.
தமிழக முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டை எப்படி அணுகுகிறார்கள், சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பது தொடர்பாக ஆளுநர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. பல கல்வியாளர்களை அவர் சந்திக்கும்போது ஊழல் தொடர்பான தகவல்கள் கிடைத்ததாகவும், அதைத்தான் தான் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக,  சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com