சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சரணகோஷ யாத்திரையில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த யாத்திரை கோவை, புது சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் தொடங்கி ஜி.பி. சந்திப்பு, சத்தி சாலை, காந்திபுரம் சிக்னல் வழியாக வி.கே.கே.மேனன் சாலையில் நிறைவடைந்தது. இந்த யாத்திரையில் பஜனை, பக்தி பாடல்களைப் பாடியும், நடனமாடியும் பக்தர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, தேசியத் தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
ஐயப்பனை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை ஹிந்து தர்மம்தான் தீர்மானிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட உத்தரவு நமது பண்பாடு, கலாசாரத்தைக் காக்கும் வகையில் உள்ளதா என்பதை நீதிபதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் தனிமனிதனின் ஒழுக்கக் கேட்டையும், மனக் கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளன. மனித குலத்துக்கு ஏற்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றார்.
இந்த யாத்திரையில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார், கோவை ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத் தலைவர் கே.கே.ராமசந்திரன், செயலாளர் கே.விஜயகுமார், துணைச் செயலாளர்கள் பத்ரசாமி, விஸ்வநாதன், பொருளாளர் வேலாயுதம், கோவை சக்தி டெக்ஸ்டைல்ஸ் செயல் இயக்குநர் ராஜ்குமார் ஆகியோர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.