கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் 1,793 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிஷத், பாரத் சேனா, அனுமன் சேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக கோவை மாநகர் பகுதிகளில் 393 விநாயகர் சிலைகள் வைக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல், கோவை புறநகர் பகுதிகளான பேரூர், கருமத்தம்பட்டி, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 1,400 சிலைகள் பிரதிஷ்டை செய்யவும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் குறித்து காவல் துறையினர் பரிசீலனை செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் முழுவதிலுமாக 1,793 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்படும் என்று காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட புறநகர் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 1,400 சிலைகளும் வரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 13) பிரதிஷ்டை செய்யப்படும்.
இதில் சிலைக்கு ஒரு காவலர் வீதம் 1,400 போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாவட்ட காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.