அன்னூர் அருகே, கரியாம்பாளையம் ஊராட்சி, வெள்ளாளபாளையத்தில் அரசு மதுக்கடையை முற்றுகையிட்டுப் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னூர் அருகே, கரியாம்பாளையம் ஊராட்சி, வெள்ளாளபாளையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அரசு மதுக்கடை அமைக்கப் புதிதாகக் கட்டடம் கட்டப்பட்டது. அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மதுக்கடை அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், வெள்ளாளபாளையத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி மீண்டும் மதுக்கடை திறக்கப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை காலை 11 மணியளவில் அந்தக் கடையின் முன்பு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அன்னூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், வட்டாட்சியர் பழனிசாமி, கிராம நிர்வாக அலுவலர் குமார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, பொது மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.