திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் தமிழ்நாடு கள் இயக்கம் போட்டியிடும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பிரச்னைக்கு மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவது தீர்வு தரும். கரும்புச் சக்கையில் இருந்து கிடைக்கும் எத்தனாலை வாகன எரிபொருளாகப் பயன்படுத்த வேண்டும். 85 சதவீதம் எத்தனாலைப் பயன்படுத்தும் வகையில் வாகனங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு நிரந்தரமான தீர்வு ஏற்பட வேண்டும் என்றால் தினந்தோறும் நீர் பங்கீடு செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தினால் மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்ற எண்ணமே கர்நாடகத்துக்கு வராது. மேலும், தமிழகம் வெறும் வடிகால் நிலம்தான் என்றும் அந்த மாநிலம் நினைக்காது.
தமிழகத்தில் நிலவும் நீர்ப்பாசன குளறுபடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு, நீர்ப்பாசனத் துறைக்கு என்று தனியாக அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி வரும் ஜனவரி 21ஆம் தேதி சென்னையில் அசுவமேத யாகம் நடத்த உள்ளோம். அந்த யாகமே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும். வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் கள் இயக்கம் போட்டியிடும் என்றார்.