என்.ஜி.பி. பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கோவை என்.ஜி.பி. பள்ளியில் நாளைய புதுமைக்கான பாரதம் நோக்கி என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கோவை காளப்பட்டியில் என்.ஜி.பி. பள்ளியில் மாணவர்களிடையே உள்ள அறிவியல் சிந்தனைகள் மற்றும் படைப்பாற்றலை வெளிக் கொண்டுவருதல், அறிவியல் அணுகுமுறையோடு கற்றலைத் தொடர்புபடுத்துதல் ஆகியவற்றை மையமாக கொண்டு நாளைய புதுமைக்கான பாரதம் நோக்கி, அறிவியல் தொழில்நுட்பப் புதுமை என்ற தலைப்புகளில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில் ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த 110 வகையான பல்வேறு மாதிரி வடிவங்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.
இந்தக் கண்காட்சியை கே.எம்.சி.எச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி பார்வையிட்டு பேசுகையில், மாணவர்கள் கேள்வி கேட்பதன் மூலம் அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
கண்காட்சியில் தூய்மையான பாரதம், பசுமை ஆற்றல், விவசாயம், சுற்றுப்புறச் சூழல், சமூக ஆரோக்கியம், வாழ்வுசார் நோய்கள், மாற்று சக்தி, ஸ்டெம்செல் ஆகிய தலைப்புகளில் மாதிரி வடிவங்கள் இடம்பெற்று இருந்தன.
நிகழ்ச்சியில் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி, கே.எம்.சி.எச். மருத்துவமனையின் அறங்காவலர் டாக்டர் அருண் பழனிசாமி, என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் கல்வித் திட்ட இயக்குநர் மதுரா பழனிசாமி, பள்ளி முதல்வர் பிரீத்தா பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.