ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கையில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை இனப் படுகொலை செய்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கு இந்தியாவில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது கண்டனத்துக்குரியது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை செயல்படுத்த விடாமல் மத்திய அரசு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுள்ளது.
தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். எனவே, அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்யக் கூடாது. மேலும் 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் தாமதமின்றி ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியை பொய் வழக்கில் சிறையில் வைக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை மத்திய, மாநில அரசுகள் நசுக்கிக் கொண்டிருக்கின்றன என்றார்.