கோவை கணபதி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் பம்ப்செட் கடை நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமான வேனை ஓட்டுநர் ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை மாலை ஓட்டிச் சென்றுள்ளார். டெக்ஸ்டூல் மேம்பாலத்தின் மீது சென்றபோது, வேனின் பின் பகுதியில் எரிவாயு டேங்க் அருகில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியேறினார்.
இதையடுத்து சில நிமிடங்களில் வேன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு மீட்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் வீரர்கள் வருவதற்குள் வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.