கோவை மாவட்டத்தில் தீபாவளியையொட்டி ஊரகப் பகுதிகளில் பட்டாசுக் கடை அமைக்க செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நவம்பர் 6ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை மாவட்ட ஊரகப் பகுதிகளில் தற்காலிகமாக பட்டாசுக் கடை அமைக்க விரும்புபவர்கள் வெடிபொருள் சட்ட விதிகளின் படி மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற வேண்டும்.
இந்த உரிமத்தைப் பெற படிவம் ஏஇ-5 (5 பிரதிகள்), தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் இடத்தின் 9 சதுர மீட்டர் முதல் 25 சது மீட்டர் வரை உள்ளடக்கியதாக நிலத்தை குறிக்கும் வரைபடத்தில் சாலை வசதி, சுற்றுப்புறத் தன்மை மற்றும் கடையின் கொள்ளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது நகல், உரிமம் கோரு இடம் வாடகை கட்டடம் என்றால் இடத்தின் பத்திர நகல் மற்றும் வரி செலுத்திய ரசீது நகலுடன் கட்டட உரிமையாளரிடம் ரூ.20க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் அனுமதி கடிதம், உரிமம் கட்டணமாக ரூ.500 மற்றும் இரண்டு புகைப்படங்களுடன் செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.