மலைவாழ் மக்களைத் தாக்கிய வனத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியில் சிறுத்தை கொல்லப்பட்ட விவகாரத்தில் மலைவாழ் மக்களைத் தாக்கிய வனத் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பந்தல்கல் அம்மான்பதி, நரிக்கல்பதியைச் சேர்ந்த முருகன், கனகராஜ், அருண், மாரியப்பன், சின்னமாரி, மணி ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
பொள்ளாச்சி வனச் சரகம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பகுதியில் சில நாள்களுக்கு முன்னர் சிறுத்தையை சிலர் வேட்டையாடியுள்ளனர். இதுகுறித்து விசாரணை என்ற பெயரில் எங்களை வனத் துறையினர் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். சிறுத்தையை வேட்டையாடிய நபர்களை தப்பிக்க வைக்கவே எங்கள் மீது வனத் துறையினர் பழிசுமத்துகின்றனர்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எங்களைத் தாக்கிய வனத் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.