ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பும் பணத்தில் ரூ.56 லட்சம் கையாடல்: கைதானவர்களை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

கோவையில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பப்படும் பணத்தைக் கையாடல் செய்து மோசடி செய்த இருவரை மூன்று நாள்

கோவையில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பப்படும் பணத்தைக் கையாடல் செய்து மோசடி செய்த இருவரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க மாநகர குற்றப் பிரிவு போலீஸாருக்கு கோவை நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
கோவை, காளப்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கோவையில் உள்ள சில ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. 
இந்நிலையில் நிறுவனத்தின் மேலாளர் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், எங்கள் நிறுவனம் சார்பில் பல்வேறு வங்கிகள் அளிக்கும் பணத்தை ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பும் பணி செய்து வருகிறோம். அவ்வாறு ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பப்படும் பணத்தை, பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களால் கையாடல் செய்யப்படுகிறது. இவ்வாறு ரூ. 56.62 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து மாநகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.  விசாரணையில், ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பப்படும் பணத்தை கையாடல் செய்தவர்கள், நிறுவனத்தின் ஊழியர்களான சிங்காநல்லூரைச் சேர்ந்த ராஜா (29), சென்னையைச் சேர்ந்த ஜான்சன் (39) எனத் தெரியவந்தது. இதையடுத்து  மாநகர குற்றப் பிரிவு போலீஸார் 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பியவுடன், அன்று மாலை மீண்டும் அந்த மையத்துக்கு சென்று ரகசிய குறியீடுகளை பதிவிட்டு, பணத்தை கையாடல் செய்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
 இவர்கள் இருவரையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸார் கோவை மாவட்ட நீதித் துறை நடுவர் மன்றத்தில் (எண்.6) மனு தாக்கல் செய்தனர். 
இந்த மனு நீதித் துறை நடுவர் கே.ஆர்.கண்ணன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர், இருவரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க குற்றப் பிரிவு போலீஸாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் ராஜா, ஜான்சன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com