கோவையில் கஞ்சா விற்றதாக கல்லூரி மாணவர்கள் 8 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை, சிங்காநல்லூர் அருகேயுள்ள எஸ்ஐஎச்எஸ் காலனியில், அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 5 பேர் அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து கிலோ கணக்கில் கஞ்சா வாங்கி, அறையில் வைத்து பிரித்து பொட்டலம் போட்டு சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக சிங்காநல்லூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிங்காநல்லூர் போலீஸார், மாணவர்கள் தங்கியிருந்த அறையில் புதன்கிழமை காலை சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 8 மாணவர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.