வால்பாறையை அடுத்த சின்னக்கல்லாறு பகுதியில் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் சென்றதாக எஸ்டேட் தொழிலாளி கூறியதையடுத்து நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் வனப் பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றனர்.
சின்னக்கல்லாறு எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூரத்தில் வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் இருவர் துப்பாக்கியுடன் சென்றதாக தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவர் பார்த்ததாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் வனத் துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்று தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே திங்கள்கிழமை காலை கோவையில் இருந்து வந்த நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் சின்னக்கல்லாறு எஸ்டேட் வனப் பகுதிக்குள் ரோந்து சென்றனர். மாலையில் அவர்கள் அக்காமலை எஸ்டேட் வனப்பகுதி வழியாக வெளியேறினர்.
ஆனால் மர்ம நபர்கள் இருப்பதாக தெரியவில்லை என்றும், ஒருவேளை ஆதிவாசி மக்கள் துப்பாக்கியுடன் சென்று இருக்கலாம் என்று நக்ஸல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் அருள் தெரிவித்தார்.