சூலூர் பகுதியில் இரு இடங்களில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சூலூர், ராசிபாளையத்தை அடுத்த காளியாபுரம் எரங்காட்டுத் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையையொட்டி சாலை ஓரம் கொட்டப்பட்டிருந்த கழிவு பஞ்சில் வெள்ளிக்கிழமை மதியம் தீ பற்றியது.
இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதேபோல காங்கயம்பாளையம் பகுதியில் மதுரைவீரன் கோயில் வீதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக வெள்ளிக்கிழமை மாலை தீப்பிடித்தது.
தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்கு செல்லும் முன்பே, அப்பகுதியினர் தாங்களாகவே தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த துணிகளும், சில பொருள்களும் எரிந்து நாசமாகின.