நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நீதி மய்யத்தின் நீலகிரி தொகுதி வேட்பாளர் என். ராஜேந்திரன் வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்து வருகிறார்.
மேட்டுப்பாளையம் நகரப்பகுதியில் உள்ள கடைகள், தெருக்களில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி என். ராஜேந்திரன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீலகிரியில் 66 ஆயிரம் ஏக்கர் அரசு நிலங்களில் தனியார் தேயிலை தோட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நீலகிரியில் விவசாயம் இன்றி பயனில்லாமல் இருக்கும் சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேலான அரசு நிலங்களை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு வழங்கப்படும். மேட்டுப்பாளையத்தில் சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
என்.ராஜேந்திரன் தேநீர் கடைகளில் வாக்காளர்களுடன் அமர்ந்து தேநீர் அருந்தியும், அவர்களுடன் கலந்துரையாடியும் வாக்கு சேகரித்து வருகிறார்.