கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்த்தின் கீழ் உள்ள 140 ஹோட்டல்களில் தேர்தல் நாளன்று வாக்கு செலுத்தியதற்கான அடையாளத்தை காண்பித்தால் பில் தொகையில் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்க உள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கோவை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் எம்.சிவக்குமார் கூறியதாவது:
கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத்தின் கீழ் கோவையில் 140 ஹோட்டல்கள் உள்ளன. தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு செய்பவர்களுக்கு தள்ளுபடி வழங்குவதாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன் அங்கமாக உள்ள கோவை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் கீழ் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு செய்தவர்களுக்கு தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்கு அளிப்பது வாக்காளர்களின் கடமையாகும். நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையிலும், வாக்காளர்களை ஊக்குவிக்கவுமே இம்முயற்சியாகும்.
அதன்படி வாக்குப்பதிவு நாளன்று மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வாடிக்கையாளர்கள் வாக்குப்பதிவு செய்ததற்கான அடையாளத்தை காண்பித்து, தங்களது பில் தொகையில் இருந்து 10 சதவிகிதம் தள்ளுபடியை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.