மக்களவைத் தேர்தல் அன்று மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவும் வகையில், மையத்துக்கு ஒருவர் வீதம் 975 பேர் நியமிக்கப்படவுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 686 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடிகளில் சாய்வு தளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு உதவும் வகையில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு ஒரு சக்கர நாற்காலி வீதம் 975 சக்கர நாற்காலிகள் வாக்குச் சாவடி மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளை வாக்குச் சாவடி மையத்தில் இருந்து வாக்குப் பதிவு அறைக்கு சக்கர நாற்காலியில் அமரவைத்து தள்ளிக்கொண்டு போவதற்கும், அவர்களுக்கு உதவும் வகையிலும் ஒரு மையத்துக்கு ஒருவர் ஸ் வீதம் தன்னார்வலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு ரூ.250 ஊதியமாக வழங்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.