எம்.பி. என்ன செய்ய வேண்டும்
நமது கோவையில் இருந்து பெங்களூரு, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகரங்களை இணைக்கும் வகையிலான மெட்ரோ அல்லது புறநகர் ரயில்கள் இயக்க வேண்டும். எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்கள் அமைக்க வேண்டும்.
சிறு, குறுந்தொழில்கள் நலிவடைந்துள்ள நிலையில் அவற்றுக்கான அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வடகோவை ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி, அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை முறைப்படுத்த வேண்டும்.
சி.எம்.ஜெயராமன், தலைவர், சிட்டிசன்ஸ் வாய்ஸ்
சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் சென்னை ஆவடியில் உள்ளது போல் கோவையிலும் புதிய தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். பீளமேடு, சிங்காநல்லூர் ரயில் நிலையங்களை அகற்றிவிட்டு ஹோப் கல்லூரி பகுதியில் புதிய ரயில் நிலையம் அமைத்து, ரயில்கள் அனைத்தும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில் டைடல் பார்க், கல்வி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் ஹோப் கல்லூரி பகுதியில் இறங்கிச் செல்லும் வாய்ப்புள்ளதால் நகரில் போக்குவரத்து நெருக்கடி குறையும். கோவையில் மத்திய அரசின் நுகர்வோர் சமரச தீர்வு மையம் அமைக்க வேண்டும். உணவு மாதிரி பகுப்பாய்வுக் கூடம் சென்னையில் மட்டுமே உள்ளது. அதனை கோவையிலும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நா.லோகு, செயலாளர் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ்
கோவை நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்தும் வகையில் அவிநாசி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை, திருச்சி சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் சுற்று வட்டச் சாலை அமைக்க வேண்டும்.
கோவையில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை அமைக்க வேண்டும்.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற தேசிய கல்வி நிறுவனங்கள் அமைக்க வேண்டும். மத்திய அரசின் பொலிவுறு நகரம் திட்டத்தில் குளங்கள் புனரமைப்புக்கு மட்டும்
முக்கியத்துவம் கொடுக்காமல் நகரின் உள்கட்டமைப்புக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
எஸ்.பி.தியாகராஜன், சமூக ஆர்வலர்