சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலைப் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திங்கள்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான ரீசார்ஜ் கூப்பன்களை பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சந்தோஷ் விஜயராகவன் தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் செஞ்சேரிமலைப் பகுதியில் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது, பல்லடம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்தை வழிமறித்து சோதனையிட்டனர். அதில் பேருந்து ஓட்டுநர் இருக்கை அருகில் கிடந்த பார்சலை திறந்து பார்த்தனர். அப்போது, அந்த பார்சலில் கட்டுக்கட்டாக ரூ1.69 லட்சம் மதிப்புடைய செல்லிடப்பேசி ரீசார்ஜ் கூப்பன்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநரிடம் கேட்டபோது, பல்லடம் பகுதியில் இருந்து ஒருவர் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒருவரிடம் கொடுக்க இந்த பார்சலை கொடுத்ததாகவும், அந்த நபர் யார் என்று தனக்கு தெரியாது எனவும் கூறினார்.
அதையடுத்து அந்த கூப்பன்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் அவற்றை ஒப்படைத்தனர்.