கோவை தெலுங்குபாளையத்தில் உள்ள திமுக பிரமுகருக்கு சொந்தமான கட்டடத்தில் வருமான வரித் துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.
கோவை செல்வபுரம், தெலுங்குபாளையம் பகுதிகளில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் விநியோகிப்பதாகவும், தெலுங்குபாளையத்தில் உள்ள திமுக பிரமுகருக்குச் சொந்தமான கட்டடத்தில் பணம் வைக்கப்பட்டுள்ளதாகவும் பறக்கும் படை மற்றும் வருமான வரித் துறையினருக்கு திங்கள்கிழமை பிற்பகலில் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, 10 பேர் கொண்ட வருமான வரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தெலுங்குபாளையத்தில் உள்ள திமுக பிரமுகருக்குச் சொந்தமான கட்டடத்துக்குச் சென்றனர். இரண்டு தளங்கள் கொண்ட அந்தக் கட்டடத்தில் இருந்த அறைகளில் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர சோதனைக்குப் பின்னர் அதிகாரிகள் வெளியே வந்தனர்.
இந்தச் சோதனையில் பணம் மற்றும் பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது பொய்யான தகவலா என்பது குறித்து போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.