மகாவீர் ஜயந்தியை முன்னிட்டு மாநகராட்சி பகுதியில் புதன்கிழமை இறைச்சி விற்பனை செய்வதற்கு தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மகாவீர் ஜயந்தி புதன்கிழமை (ஏப்ரல் 17 ) அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஆடு, மாடு மற்றும் கோழி உள்ளிட்டவைகளை வதம் செய்வதற்கும், இறைச்சியை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
எனவே, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட வேண்டும். மேலும் கோவை மாநகராட்சியில் உக்கடம், சிங்காநல்லூர், போத்தனூர், துடியலூர் மற்றும் சக்தி சாலை உள்ளிட்ட 10 இடங்களில் செயல்பட்டுவரும் ஆடு, மாடு அறுவைமனைக் கூடங்கள் அன்றைய தினம் மூடப்படும்.
தடை உத்தரவை மீறி ஆடு, மாடுகளை வதை செய்தல் மற்றும் இறைச்சி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.