பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் தற்போதைய எம்.பி. சி.மகேந்திரன் வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார்.
அட்டகட்டி, கவர்க்கல், கருமலை, வால்பாறை, சோலையாறு, முடீஸ், சோலையாறு அணை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் வாக்காளர்களிடையே அவர் பேசியதாவது:
பொள்ளாச்சியில் இருந்து கோவை, மற்றும் திண்டுக்கல்லுக்கு நான்கு வழிச்சாலைகள், பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் என கடந்த 5 ஆண்டுகாலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.
தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்குவதோடு, ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்படும். வால்பாறை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 30 ஏக்கரில் பொழுதுப்போக்கு பூங்கா அமைக்கப்படும் என்றார்.
பிரசாரத்தின்போது, வால்பாறை எம்எல்ஏ கஸ்தூரி வாசு, அதிமுக தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது, நகரச் செயலாளர் மயில்கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.