சூலூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 1.41 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே திருப்பூர் ஜி.எஸ்.டி ஆய்வாளர் மலர்விழி தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசு மருத்துவமனைஅருகே ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இரண்டு பெட்டிகளில் ரூ. 1.41 கோடி இருப்பது தெரியவந்தது.
பணத்தைக் கொண்டுவந்த கோவை பரோடா வங்கி கிளையைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை. மேலும், பல்லடம், செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை பகுதிகளில் பரோடா வங்கிக் கிளைகளில் இருந்து கோவையில் உள்ள முதன்மை வங்கிக் கிளைக்கு பணத்தை எடுத்துச் செல்வதாக அவர் தெரிவித்தார்.
ஆவணங்கள் இல்லாததால் அப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சூலூர் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் எஸ். பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.