பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து பொள்ளாச்சியில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்தார்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
எந்த ஒரு தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற துணைவேந்தர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், திரைத்துறையினர் என அனைத்து தரப்பினரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
கட்டணமில்லாமல் கல்வியை கொடுப்பது அரசின் கடமையாகும். உயர் கல்வி ஆணையம் என்பது அரசு கல்லூரிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கை ஆகும். நீட் தேர்வு முறையால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. அரசு பள்ளிகள் வாயிலாக கட்டணம் இல்லா கல்வி, அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை, சுகாதார நிலையங்களை மேம்படுத்துதல் என சிறப்பான அம்சங்களை காங்கிரசின் தேர்தல் அறிக்கை கொண்டுள்ளது என்றார். இதில், பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் கு.ராமகிருஷ்ணன், திமுக, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.