காணாமல் போன மனைவியை கண்டுபிடித்துத் தராவிட்டால் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்த வாலிபரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம், வட்டிப்பிள்ளையார் கோயிலைச் சேர்ந்தவர் முருகன் (35). இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது இரண்டுக் குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை விசாரித்தனர். அப்போது முருகன் கூறியதாவது:
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தைச் சேர்ந்த பிரியா என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வருதவதாக சொல்லிச் சென்ற எனது மனைவியைக் காணவில்லை. இது தொடர்பாக கும்பகோணம் (மேற்கு) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அவர்கள் எனது மனைவியின் செல்லிடப்பேசி எண்ணை வைத்து விசாரித்து போது கோவை பகுதியில் இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த ஒருமாத காலமாக கோவை முழுவதும் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே கோவை மாவட்ட போலீஸார் எனது மனைவியை கண்டுபிடித்துத் தர நடவடிக்கை வேண்டும். இல்லையெனில் குழந்தகைகளுடன் தற்கொலை செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்றார்.
இதையடுத்து அவரை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.