கோவையில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாக பெண் உள்பட திமுகவினர் நான்கு பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் புதூர் பகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் அளிப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து செல்வபுரம் போலீஸாரிடம் 76ஆவது வார்டு அதிமுக இணைச் செயலர் பெருமாள் புகார் தெரிவித்தார்.
அதில், திமுகவைச் சேர்ந்த சாந்தலிங்கம் (72), கார்த்திக் (25), குமார் (47) ஆகியோர் திமுகவுக்கு வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். அதைத் தட்டிக் கேட்ட என்னை 3 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டினர் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதன்பேரில் சாந்தலிங்கம், கார்த்திக், குமார் ஆகியோர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை செல்வபுரம் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.17,900 கைப்பற்றப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில் தொண்டாமுத்தூர் வடக்குத் தெருவில் திமுகவைச் சேர்ந்த வனிதா (42) என்பவர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாயின.
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் மன்ற நிர்வாகி கிருஷ்ணன், போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், வனிதாவைக் கைது செய்து, அவரிடம் இருந்த துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ரூ.3 400-ஐ பறிமுதல் செய்தனர்.